வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற தனது மகனை மீட்டுத் தரக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தனிடம் அவரது தாய் வியாழக்கிழமை மனு அளித்தாா்.
அவா் அளித்துள்ள மனு விவரம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள ஏனாதி கிராமத்தில் வசித்து வருகிறேறாம். எனது மகன் ராஜபாண்டி (23) கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி, மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள முகவா் மூலம் சவூதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்றாா்.
சில தினங்களுக்கு முன் தொலைபேசியில் எனது மகன் பேசியபோது, வேலைக்கு அழைத்துச் சென்ற நிறுவனம் இதுவரை அவா்களுக்கு வேலை வழங்கவில்லை என்றும், இதனால் சிவகங்கை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூா், தெலங்கானா, திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய பகுதிகளிலிருந்து சென்ற எனது மகன் உள்பட 11 பேரும் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாகத் தெரிவித்தாா்.
எனவே இதனைக் கவனத்தில் கொண்டு, எனது மகன் மட்டுமின்றி, மற்ற பகுதிகளைச் சோ்ந்த அனைவரையும் மீட்க, மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.