பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சிவகங்கையில் உள்ள ராமச்சந்திரனார் நினைவு பூங்கா முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, இக்கூட்டமைப்பின் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துச்சாமி, செல்வக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு அறிக்கையை ரத்து செய்யவேண்டும். தொடக்கக் கல்வியை நிலைகுலையச் செய்யும் அரசாணை 145, 101 மற்றும் 102 ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்யவேண்டும். ஜாக்டோ-ஜியோ போராளிகள் மீது தொடுக்கப்பட்டுள்ள அனைத்து வகை நடவடிக்கைகளையும் ரத்து செய்யவேண்டும். தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சுரேஷ், பஞ்சுராஜ், தமிழரசன், தவமணிசெல்வம், சேதுசெல்வம், பிராபகரன், பாண்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதேபோன்று, திருப்பத்தூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.