சென்னையிலிருந்து தனது தாயின் மருத்துவச் செலவுக்காக ரூ. 1 லட்சம் கொண்டுவந்த மகன், அதை ரயிலில் தவறவிட்டதை அடுத்து, அப்பணத்தை ராமேசுவரம் ரயில்வே காவல் துறையினர் மீட்டு அவரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர்.
ராமநாதபுரம் அடுத்துள்ள கீழக்கரையைச் சேர்ந்தவர் அலியுல்முருஜா (40). இவர் தனது தாயுடன் சென்னையிலிருந்து கீழக்கரைக்கு வந்துள்ளார். இவரது தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், அவரது மருத்துவச் செலவுக்காக ரூ. 1 லட்சம் பணத்தை பையில் வைத்து ரயிலில் வந்துள்ளார். வெள்ளிக்கிழமை அதிகாலையில், ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் தாயுடன் அலியுல்முருஜா இறங்கியுள்ளார்.
அதன்பின்னர், ரயில் புறப்பட்டுச் சென்றதும், தான் பணம் வைத்திருந்த பையை ரயிலிலேயே விட்டுவிட்டது தெரியவந்துள்ளது. உடனே, ராமநாதபுரம் ரயில் நிலைய அதிகாரியிடம் அலியுல்முருஜா புகார் தெரிவித்தார். அதன்பேரில், ராமேசுவரம் ரயில்வே காவல்துறை சார்பு-ஆய்வாளர் தனுஷ்கோடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, அந்த ரயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ஆதிமூலம், அலீப்கான் ஆகிய இருவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே, அலியுல்முருஜா பயணித்த ரயில் பெட்டிக்குச் சென்ற காவல் துறையினர், அங்கிருந்த பணப் பையை கைப்பற்றினர். அதையடுத்து, அலியுல்முருஜாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை ராமேசுவரம் ரயில்வே காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு, உரிய விசாரணைக்கு பின் பணப் பை ஒப்படைக்கப்பட்டது. தனது தாயின் மருத்துவச் செலவுக்காக கொண்டுவரப்பட்ட பணத்தை மீட்டுத் தந்த காவல் துறைக்கு அவர் நன்றி தெரிவித்தார்.