காரைக்குடி வ.உ.சி சாலையில் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகள் நடைபெறவிருப்பதால் அச் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்து புதன்கிழமை (செப். 25) முதல் அமலுக்கு வருவதாக போக்குவரத்துக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
காரைக்குடி நகராட்சி மேற்கொண்டு வரும் பாதளச்சாக்கடைத் திட்டப்பணி முக்கியப் போக்குவரத்து மிகுந்த வ.உ.சி சாலையில் தொடங்க உள்ளன.
இதனால் போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்து காவல்துறையினர், நகராட்சி அதிகாரிகள் மற்றும் வணிகர்கள், பொதுமக்களிடையே ஆலோசனை நடத்தியிருந்தனர். அதன்படி போக்குவரத்தை புதன்கிழமை முதல் மாற்றம் செய்யவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மதுரை, பரமக்குடி, சிவகங்கை பகுதியிலிருந்து காரைக்குடி வரும் பேருந்துகள் செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி வழியாக கழனிவாசல் வந்து புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
தேவகோட்டை, ராமநாதபுரம், ராமேசுவரம், தொண்டி பகுதிகளிலிருந்து காரைக்குடி வரும் பேருந்துகள் செஞ்சை பெருமாள் கோயில், பழைய அரசு மருத்துவமனை வழியாக புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
மதுரை, பரமக்குடி, சிவகங்கை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் பெரியார்சிலை, 2-வது போலீஸ் பீட், பழைய பேருந்து நிலையம் வழியாகவும், தேவகோட்டை, ராமநாதபுரம், ராமேசுவரம், தொண்டி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் பெரியார் சிலை, 2-வது போலீஸ் பீட், கீழ ஊரணி நடராஜா திரையரங்கு வழியாகவும் செல்ல வேண்டும் என்று காரைக்குடி டி.எஸ்.பி அருண் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.