சிவகங்கை அருகே அண்ணாமலை நகரில் அடிப்படை வசதிகள் கோரி, அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை-இளையான்குடி சாலையில் அண்ணாமலை நகர் உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த பகுதியில் கடந்த சில தினங்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
மேலும் மின் விநியோகம் இருந்தாலும், குறைந்த அழுத்த மின்சாரம் விநியோகிக்கப்படுகிறதாம். மேலும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.
இதுபற்றி சம்பந்தபட்ட துறை அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சிவகங்கை-இளையான்குடி சாலையில் அண்ணாமலை நகரில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சிவகங்கை நகர் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.