"டிக் டாக்' செயலி நட்பால் நகையுடன் மாயமானதாக கூறப்பட்ட இளம்பெண் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சரணடைந்தார்.
சிவகங்கை மாவட்டம் திருவேகம்பத்தூர் அருகே உள்ள கடம்பங்குடியைச் சேர்ந்தவர் வினிதா (20). இவருக்கும், சானாஊருணியைச் சேர்ந்த ஆரோக்கியலூயி என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், அடுத்த சில மாதங்களில் ஆரோக்கியலூயி வெளிநாட்டுக்கு சென்று விட்டார். அதைத் தொடர்ந்து, வினிதாவுக்கும், திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுக்கும் "டிக் டாக்' செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த குடும்பத்தினர் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,கடந்த சில தினங்களுக்கு முன் "டிக் டாக்' செயலி நட்பால் வினிதா நகையுடன் காணாமல் போய்விட்டதாக அவரது தாயார் அளித்தப் புகாரின் பேரில் திருவேகம்பத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து செய்தி சமூக ஊடகங்களில் பரவின.
இதையறிந்த, வினிதா சிவகங்கையில் உள்ள நகர் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சரணடைந்தார். அவரிடம் சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பின் போலீஸார் தரப்பில் கூறியது : கடந்த சில தினங்களுக்கு முன் வெளிநாட்டிலிருந்து வந்த கணவருக்கும், வினிதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கரூரில் உள்ள அவரது தோழி சரண்யா வீட்டில் தங்கி இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு திருவேகம்பத்தூரில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், திருவேகம்பத்தூர் போலீஸாரிடம் வினிதாவை ஒப்படைத்து விட்டோம் என்றனர்.