சிலம்பு ரயிலில் 21 பவுன் நகை மற்றும் ரூ.33 ஆயிரம் பணத்துடன் தவற விட்ட கைப்பையை ரயில்வே போலீஸார் மீட்டு உரிய பயணியிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அரியாபட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த மணிமுத்து மனைவி புவனேஸ்வரி (30).இவர் தனது குழந்தையுடன் சென்னையிலிருந்து திங்கள்கிழமை இரவு புறப்பட்ட சிலம்பு ரயிலில் தேவகோட்டைக்கு வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை அதிகாலை தேவகோட்டை வந்திறங்கிய புவனேஸ்வரி, தன்னுடைய கைப்பையை ரயிலில் வைத்து விட்டு இறங்கியுள்ளார். இதையடுத்து, ரயில் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் இதுபற்றி தேவகோட்டை ரயில்வே காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், ரயிலில் பாதுகாப்புப் பணியிலிருந்த ரயில்வே போலீஸார் புவனேஸ்வரி வந்த பெட்டியை சோதனை செய்தனர். இதில் அவர் அமர்ந்திருந்த இருக்கை அருகே கைப்பை இருந்தது தெரிய வந்தது. அதனைக் கைப்பற்றிய ரயில்வே போலீஸார் மானாமதுரை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதன்பின்னர், புவனேஷ்வரி மற்றும் அவரது கணவர் மணிமுத்து ஆகியோரை மானாமதுரை ரயில் நிலையத்துக்கு வரவழைத்து கைப்பையில் இருந்த 21 பவுன் நகை, வெள்ளிக் கொலுசு, ரொக்கம் ரூ.33 ஆயிரத்து 720 ஆகியவற்றை ஒப்படைத்தனர். அதனை பெற்றுக் கொண்ட அவர்கள் போலீஸாருக்கு நன்றி தெரிவித்தனர்.