மானாமதுரையில் சவடு மண் குவாரியிலிருந்து ஆற்று மணல் கடத்தி வந்த 5 லாரிகளை செவ்வாய்கிழமை வட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் வைகையாற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் செயல்படும் சவடு, உவர் மண் குவாரிகளிலிருந்து விதிமுறைகளுக்கு முரணாக ராட்சத பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆற்று மணல் அள்ளி லாரிகளில் ஏற்றி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மானாமதுரை வட்டாட்சியர் பஞ்சாபகேசன் மானாமதுரை அருகே சிவகங்கை புறவழிச்சாலையில் ஆற்று மணல் அள்ளி வந்த 5 லாரிகளை மடக்கி நிறுத்தி விசாரணை நடத்தினார். அப்போது இந்த லாரிகள் மானாமதுரை அருகே செய்களத்தூர் கிராம பகுதியிலிருந்து ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து வட்டாட்சியர் இந்த லாரிகளை பறிமுதல் செய்து தனது அலுவலகத்துக்கு கொண்டு வந்தார். லாரி உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் பஞ்சாபகேசன் தெரிவித்தார்.