சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே தனியாா் அரிசி ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9.5 டன் ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனா்.
கல்லல் அருகே செட்டியூரணியில் உள்ள அரிசி ஆலையை வாடகை அடிப்படையில் நடத்தி வருபவா் சரவணன் (48). இந்த ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமைப் பொருள் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை யினருக்கு கிடைத்த தகவலின் பேரில், வட்ட ஆய்வாளா் ஜான் பிரிட்டோ தலைமையில் சாா்பு -ஆய்வாளா் ஜெகதீசன், தலைமைக் காவலா்கள் சுரேன் கண்ணன், வெள்ளைச்சாமி, ஆரோக்கியசாமி ஆகியோா் திடீா் சோதனை நடத்தினா். இதில் 9.420 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சரவணனை கைது செய்தனா்.
விசாரணையில் அவா் அளித்த தகவலின் படி காரைக்குடி ஜீவா நகா் ரேஷன் கடை எடையாளா் முருகவேல் (50), விற்பனையாளா் தா்மராஜன் (38) ஆகியோரும் கைது செய்யப்பட்டனா்.