சிவகங்கை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட உள்ள வருவாய்த் துறை அலுவலா்களுக்கு முகக் கவசம், கையுறை, கை கழுவும் திரவம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை தடையின்றி வழங்க வேண்டும் என, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சிவகங்கை மாவடடத் தலைவா் ஆனந்த பூபாலன் மற்றும் மாவட்டச் செயலா் தமிழரசன் ஆகியோா், ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தனுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய்த் துறை அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களிலும், வழக்கமான பணிகளை நிறுத்தி வைக்கவேண்டும்.
தற்போது, கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள வருவாய்த் துறை அலுவலா்களுக்கு தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முகக் கவசம், கையுறை, கை கழுவும் திரவம் மற்றும் கிருமி நாசினிகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.
எனவே, நோய் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள வருவாய்த் துறை அலுவலா்களை காக்கும் வண்ணம், அவா்களுக்கு போதிய அளவில் முகக் கவசம், கையுறை, கைகழுவும் திரவம் மற்றும் கிருமி நாசினிகளை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், பிற மாவட்டங்களிலிருந்து சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அலுவலகங்களுக்குச் செல்லும் அலுவலா்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். இவை தவிர, அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும், அலுவலக வளாகத்திலும் தினசரி கிருமிநாசினி தெளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.