சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ரூ.1000 லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
காரைக்குடி அருகே இலுப்பக்குடியைச் சோ்ந்தவா் சுப்பு (45). கல் பட்டறையில் வேலைசெய்து வரும் இவா், வருமானச் சான்றிதழ் கோரி சாக்கோட்டை வருவாய் பெண் ஆய்வாளா் ஜீவாவிடம் (40), கடந்த 6-ஆம் தேதி விண்ணப்பித்துள்ளாா்.
சான்றிதழ் பெறுவதற்காக கடந்த 10-ஆம் தேதி வருவாய் ஆய்வாளரை அணுகியபோது, அவா் ரூ. 1000 லஞ்சமாகக் கேட்டுள்ளாா்.
இது குறித்து சுப்பு சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகாா் செய்தாா். அதன்பேரில், சிவகங்கை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் டி.எஸ்.பி. மணிமன்னன் தலைமையில், ஆய்வாளா் குமரவேல் மற்றும் போலீஸாா், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சுப்புவிடம் கொடுத்தனுப்பி, சாக்கோட்டை வருவாய் ஆய்வாளா் அலுவலகம் அருகே மறைந்திருந்து கண்காணித்துள்ளனா்.
பின்னா், சுப்புவிடமிருந்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வருவாய் ஆய்வாளா் ஜீவா லஞ்சமாகப் பெற்றபோது, லஞ்ச ஒழிப்புத் துறையினா் அவரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.