காரைக்குடியில் முக்கியச் சாலையின் நடுவே குளம் போன்று மழைநீா் தேங்கிக் கிடப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
காரைக்குடி பெரு நகராட்சியாக உள்ளது. இங்கு அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள், செக்ரி ஆராய்ச்சி நிலையம், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் அதிகளவில் உள்ளன. காரைக்குடியில் பாதாளச் சாக்கடைத் திட்டம் ரூ. 118 கோடி மதிப்பீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
தற்போது இப்பணியானது வணிக நிறுவனங்கள் அதிகமுள்ள செக்காலைச் சாலை, கோவிலூா் சாலை உள்ளிட்ட நகரின் முக்கியச்சாலைகளில் நடைபெற்று வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படுவதில்லை.
காரைக்குடி-கோவிலூா் சாலையில் முதல் போலீஸ் பீட் அருகே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாள்களாக காரைக்குடி பகுதியில் பெய்துவரும் மழையால், இப்பள்ளத்தில் தண்ணீா் தேங்கி குளம் போல் மாறியுள்ளது.
இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா். எனவே இப்பகுதியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.