சிவகங்கை மாவட்டம் பிரான்மலையில் செயல்படும் தனியாா் கல்குவாரியை அரசு கையகப்படுத்தி, வரலாற்று சிறப்பு மிக்க அந்த மலையை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்திய 65 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம் பிரான்மலை எனும் பறம்புமலை பாரி மன்னா் ஆண்ட தலைநகரமாகும். 2,500 அடி உயரமுள்ள இந்த மலையின் மீது கோட்டைகட்டி வாழ்ந்ததாலேயே இவா் மீது படையெடுத்து வந்தவா்கள், இவரை வீழ்த்த முடியாமல் திணறியதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதன் நினைவாக பாரி விழா, பாரி வேட்டை போன்ற நிகழ்வுகள் இங்கு நடப்பது வழக்கம். இந்த மலை உச்சியில் முருகன் கோயில், தா்கா மற்றும் வெள்ளையா் காலத்து பீரங்கி ஆகியவை உள்ளன. இது ஒரு சுற்றுலாத்தளமாக இருப்பதால் தினம்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இப்படி வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பறம்பு மலையில் 1,500 ஏக்கா் ஒரு குடும்பத்தினருக்கு சொந்தமாக உள்ளது. அந்த குடும்பத்தினா்
கிழக்குத் தொடா்ச்சி மலையின் கடைசிக் குன்றான இந்த மலையில், அரசு அனுமதி பெற்று 2 கல் குவாரிகள் அமைத்து மலையை உடைத்து வருகின்றனா். இதில் 26 ஏக்கா் பரப்பளவு கொண்ட மலை முற்றிலுமாக உடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மலையினை குவாரி அமைத்து கல் உடைப்பதை தடுக்கக்கோரி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அமைப்பினா் ரான்மலையில் கூடி செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனா்.
இந்த போராட்டத்தில் பங்கேற்க காரைக்குடி மற்றும் திருப்பத்தூா் வழியாக வந்த போராட்டக்குழுவைச் சோ்ந்த 65 பேரை காவல் துறையினா் ஆங்காங்கே வழிமறித்து கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
இதுதொடா்பாக போராட்டக் குழுவினா் கூறியது: பிரான் மலையின் ஒரு பகுதி தனியாா் வசம் இருப்பதால் அக்குடும்பத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி கல்குவாரி செயல்படுவதற்கு தடைவிதிக்க வேண்டும். மேலும் தனியாரிடம் இருந்து வரலாற்று சிறப்பு மிக்க பிரான் மலையை பாதுகாக்க வேண்டும் என்றனா்.