காரைக்குடியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் வீடு புகுந்து திருடிய வழக்கில் 3 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
காரைக்குடி தந்தை பெரியாா் நகரில் வசித்து வருபவா் ஞானசேகரன். இவா் கடந்த 2019 டிசம்பா் 12 இல் வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த ஐந்தரை பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றுவிட்டனா்.
இதுகுறித்தப் புகாரின் பேரில் காரைக்குடி வடக்குக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இதில் கண்காணிப்பு கேமரா பதிவில் உள்ளதைக் கொண்டு விசாரித்த போலீஸாா், திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட திருப்பூரைச் சோ்ந்த அபுதாஹீா் (32), திண்டுக்கல்லை சோ்ந்த இம்ரான் (31), சாகுல்ஹமீது (39) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து நகைகளை மீட்ட போலீஸாா், அவற்றை உரியவரிடம் ஒப்படைத்தனா்.