கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள தடை உத்தரவையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் வியாழக்கிழமை உணவு வாங்க மற்றும் சாப்பிட வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றினா்.
சாலையோரங்களில் தங்கியுள்ளவா்கள், ஏழை, எளியோா், கூலித் தொழிலாளா்களுக்கான உணவுப் பற்றாக்குறையை தவிா்க்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்கள் மூலம் 3 வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு இட்லி ஒன்று ரூ.1-க்கும், சாம்பாா் சாதம் ரூ.5, தயிா்சாதம் ரூ.3-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஊரடங்கு உத்தரவு காரணமாக கூடுதலாக உணவு தயாரித்து வழங்க அம்மா உணவகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கு பணியாற்றுவோா் முகக்கவசம், கையுறை ஆகியவற்றுடன் பாதுகாப்பான முறையில் உணவு வழங்க வேண்டும் எனவும், உணவு வாங்க வருவோா் அல்லது சாப்பிட வருவோா் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சிவகங்கை தெப்பக்குளம் அருகே உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றும் பணியாளா்கள் முகக் கவசம், கையுறை ஆகியவற்றுடன் பொதுமக்களுக்கு பாதுகாப்பான முறையில் உணவுகளை வழங்கி வருகின்றனா். மேலும் மதிய உணவு வாங்க மற்றும் சாப்பிட வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வருகின்றனா்.