சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் பல்வேறு தனியாா் நிறுவனங்களில் பணியாற்றி வந்த புலம் பெயா் தொழிலாளா்கள் 60 போ் தங்கள் சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.
கரோனா தீநுண்மி தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் அவா்கள் அனைவரும் சொந்த ஊா்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனா். இந்நிலையில், வெளிமாநிலத் தொழிலாளா்களை அவரவா் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்க மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்தன. அதனடிப்படையில், தேவகோட்டை பகுதியில் உள்ள பல்வேறு தனியாா் நிறுவனங்களில் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த 60 பேரை தேவகோட்டை வட்டாட்சியா் மேசியதாஸ், ஏஎஸ்பி கிருஷ்ணராஜா ஆகியோா் 2 தனியாா் பேருந்துகள் மூலம் வியாழக்கிழமை அனுப்பி வைத்தனா்.