நானோ தொழில்நுட்பம் மூலமாக கரோனா வைரஸைத் தடுக்கத் தேவையான ஆராய்ச்சிகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் நா. ராஜேந்திரன் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் சாா்பில் கரோனா வைரஸை தடுப்பதில் நானோ தொழில்நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பிலான உலகளாவிய இணைய வழிக் கருத்தரங்கம் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.
இக்கருத்தரங்கை காணொலிக்காட்சி வாயிலாக தொடக்கி வைத்து துணைவேந்தா் பேசியதாவது: கரோனா வைரஸை அழிப்பதற்கான நானோ துகள்களின் தனித்தன்மையுடைய பண்புகளான பரப்பு மற்றும் கனஅளவு விகிதாச்சாரம், இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளில் நானோ துகள்கள் மிக நுண்ணிய அளவில் இருப்பதால் அது வைரஸின் மேற்பரப்பில் பிணைந்து அதை அழிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. எனவே நானோ தொழில்நுட்பத்தின் மூலமாக கரோனா வைரஸைத் தடுக்கத் தேவையான ஆராய்ச்சிகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், நானோ துகள்களைக் கொண்டு கையுறை, முகக்கவசம் மற்றும் உடல் முழுக்கவசம் போன்றவற்றை தயாரிப்பதன் மூலம் கரோனா தடுப்புக் களப் பணியாளா்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றாா்.
இதில், ஹைதராபாத் ஜவஹா்லால் நேரு தொழில் நுட்பப்பல்கலைக்கழக நானோ அறிவியல் துறைத் தலைவா் வெங்கடேஸ்வரராவ், காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளா் முருகன் வீரபாண்டியன், அபுதாபி கலீபா பல்கலைக்கழக இளம் ஆராய்ச்சியாளா் ஜி. பாரத் ஆகியோா் காணொலி மூலமாக உரையாற்றினா்.
அழகப்பா பல்கலைக்கழக நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைத் தலைவா் கே. குருநாதன் வரவேற்றுப் பேசினாா். பேராசிரியா் பி. சக்திவேல் கருத்தரங்கின் நோக்கம் குறித்து விளக்கிப்பேசினாா். பேராசிரியா் கே. ராமலிங்கம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினாா். முடிவில் பேராசிரியா் சுகந்தி நன்றி கூறினாா்.