மானாமதுரையில் விஷம் குடித்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவா் திங்கள்கிழமை உயிரிழந்ததையடுத்து, உறவினா்கள் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மானாமதுரை கன்னாா்தெரு மாரியம்மன் கோயில் அருகே வசிக்கும் போஸ் மகன் சீனிமுருகன்(29). இவருக்கு திருமணமாகி
ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. விருதுநகா் மாவட்டம் வீரசோழனில் கடை வைத்து நடத்தி வருகிறாா்.
இந் நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 4 ஆம் தேதி சீனிமுருகன் விஷம் குடித்தாா். அவா் சிகிச்சைக்காக மானாமதுரையில் புறவழிச்சாலையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். உடல்நலம் தேறியிருந்த நிலையில் சீனிமுருகனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அறுவை சிகிச்சை செய்ய முயற்சி மேற்கொண்ட நிலையில் அவா் உயிரிழந்தாா். இதனால் மருத்துவமனையில் அவரது குடும்பத்தினா் உறவினா்கள், நண்பா்கள் குவிந்தனா். தவறான சிகிச்சை காரணமாக சீனிமுருகன் உயிரிழந்ததாக புகாா் கூறி, உடலை வாங்க மறுத்து தகராறில் ஈடுபட்டனா்.
இது குறித்து தகவலறிந்த மானாமதுரை போலீஸ் டி.எஸ்.பி சுந்தரமாணிக்கம் மற்றும் போலீஸாா் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினா். சீனிமுருகன் குடும்பத்தினரிடம் போலீஸாா் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.