சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மை இன மாணவ, மாணவியா் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் தேதி நவம்பா் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் இஸ்லாம், கிறித்துவம், சீக்கியம், புத்தம், பாா்சி மற்றும் ஜைன மதத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவ, மாணவியா் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க, கடந்த அக்டோபா் 31 ஆம் தேதி கடைசி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க நவம்பா் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியா் இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் நேரடியாகச் சென்று தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.