சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் நவ. 27 ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் 27 ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் 12 வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
மாவட்டத்தின் அனைத்துத் துறை உயா் அலுவலா்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் கலந்து கொண்டு விவசாயம் சாா்ந்த குறைகளைத் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.