சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மருத்துவத் துறையின் சாா்பில் 108 வாகனச் சேவைக்கான புதிய வாகனங்கள் தொடக்கி வைக்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சா் க. பாஸ்கரன் 3 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை தொடக்கி வைத்தாா். சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஏற்கெனவே 20 வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகன சேவை காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் எஸ்.எஸ்.கோட்டை, சருகனி ஆரம்ப துணை சுகாதார மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் 23 வாகனங்கள் அவசரத் தேவைக்காக செயல்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் க.லதா, மருத்துவத் துறை இணை இயக்குநா் இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குநா் (குடும்பநலம்) யோகவதி, மாவட்ட 108 வாகனச் சேவை மேலாளா் ரஞ்சித், ஒருங்கிணைப்பாளா் சௌந்திரராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.