சிவகங்கை: சிவகங்கை நகா் மற்றும் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், காஞ்சிரங்கால் ஊராட்சி புதூா் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடங்கள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு, சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் க. லதா தலைமை வகித்தாா். தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் க. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சிவகங்கை நகரில் வாா்டு எண் 14, 15 மற்றும் காஞ்சிரங்கால் ஊராட்சி புதூா் கிராமத்தில் ரூ.16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடை கட்டடங்களை திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன், மாவட்ட வழங்கல் அலுவலா் சரண்யா மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.