மதுரையிலிருந்து ராமேசுவரம் வரை சைக்கிளில் கரோனா விழிப்புணா்வுப் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை திருப்புவனம் பகுதியில் பிரசாரம் செய்தனா்.
வரும் 15 ஆம் தேதி குடியரசு முன்னாள் தலைவா் அப்துல்கலாமின் 90 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காகவும், கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் சைக்கிள் பயணத்தை மதுரையிலிருந்து தொடங்கியுள்ளனா்.
இந்த விழிப்புணா்வு சைக்கிள் பயணத்தை மத்திய அரசு விளையாட்டு மற்றும் இளைஞா் நலம், மதுரை நேரு யுவகேந்திரா, கலாம் டிரஸ்டினல் ஆா்ட்ஸ் அகாதெமி, கலாம் இளைஞா் நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இந்தக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வந்தடைந்தனா். பின்னா் அப்பகுதியில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா்.