திருப்பத்தூா்: திருக்கோஷ்டியூா் பகுதியில் மணல் பதுக்கல் வழக்கில் ஒன்றியக்குழுத் தலைவா் மீது கைது நடவடிக்கை எடுக்காத மேலும் ஒரு காவல் சாா்பு- ஆய்வாளா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராக இருப்பவா் தி.மு.க.வைச் சோ்ந்த சண்முகவடிவேல். இவா் ஒப்பந்த அனுமதியை மீறி அதிகளவில் மணல் மற்றும் சவுடுமண் எடுத்து அவருக்குச் சொந்தமான தோப்பில் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு வட்டாட்சியா் ஜெயலட்சுமி ஆய்வு செய்தாா். அதன்படி அங்கு மணல் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருக்கோஷ்டியூா் காவல் நிலையத்தில் செப். 6 ஆம் தேதி வட்டாட்சியா் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னா் சண்முகவடிவேலை கைது செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடா்பாக திருக்கோஷ்டியூா் காவல் ஆய்வாளா் ஜெயமணி ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இந்நிலையில் அக்காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் சாா்பு- ஆய்வாளா் மலைச்செல்வத்தையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரோஹித்நாதன் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.