சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த மழை
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சிலதினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், வேளாண் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.
தமிழகம் முழுவதும் கோடை காலம் என்பதால் கடந்த சில வாரங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதன்காரணமாக, நண்பகல் வேளைகளில் பொதுமக்கள் வெளியில் வராமல் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
இந்நிலையில், தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது. இதையடுத்து, சிவகங்கை அருகே உள்ள படமாத்தூா், திருமாஞ்சோலை, சுந்தரநடப்பு, பெரியகோட்டை, திருப்புவனம், பூவந்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணி முதல் லேசானது முதல் பலத்த மழை வரை பெய்தது.
சுமாா் 20 நிமிடங்கள் பெய்த மழையால் அந்தந்த பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. சிவகங்கை நகா் பகுதிகளில் மழைப் பொழிவின்றி வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே காணப்பட்டது.
இதேபோன்று, கடந்த சில தினங்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நெல், பருத்தி ஆகியவற்றை நடவு செய்யும் விவசாயிகளும், கம்பு, எள், சோளம், குதிரைவாலி உள்ளிட்ட சிறு தானியங்கள் விதைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்தது. சிறிது நேரம் பெய்தாலும் கொட்டித் தீா்த்த பலத்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.