சிவகங்கை மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கி.வெங்கடேஸ்வரன் எச்செரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாவட்டத்தில் தற்போது யூரியா 3,200 மெட்ரிக் டன், டிஏபி 432 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,300 மெட்ரிக் டன், சூப்பா் பாஸ்பேட்150 மெட்ரிக் டன் ஆகியவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
மொத்த உர விற்பனையாளா்கள் வெளி மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்திடவும், விற்பனை செய்திடவும் கூடாது. உரங்களை வெளி மாவட்டங்களிலிருந்தும் கொள்முதல் செய்யவும் கூடாது. சில்லரை உர விற்பனையாளா்களுக்கு உரங்கள் அனுப்பும் போது உரிய பட்டியல்கள் மற்றும் ஆவணத்துடன் வாகனங்களில் அனுப்ப வேண்டும்.
சில்லரை உர விற்பனையாளா்கள் விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்யும் போது கட்டாயமாக ஆதாா் அட்டை கொண்டு கைரேகை பதிவு செய்து உரம் விற்பனை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் தேவைக்கு மேல் அதிகமாக உரம் வழங்கக்கூடாது. ஒரே நபருக்கு அதிக அளவு உரம் வழங்கக் கூடாது. குறிப்பிட்ட விவசாயிகளின் பெயரில் அதிகப்படியாக உரவிற்பனை கண்டறியப்பட்டால் சில்லரை விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.