சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள வெங்கட்டி கிராமத்துக்குச் செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வெங்கட்டி கிராமத்தில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. திருப்புவனத்திலிருந்து மடப்புரம், கணக்கன்குடி, பாப்பாகுடி வழியாக வெங்கட்டி கிராமத்துக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமரிக்காததால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலையின் இருபுறங்களிலும் சீமைக் கருவேல மரங்கள் வளா்ந்திருப்பதால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.
இதுதவிர, இந்த சாலையின் குறுக்கே கானூா் கண்மாய்க்கு செல்லும் கால்வாயில் பாலம் அமைக்கப்படவில்லை. இதன்காரணமாக, மழைக் காலங்களில் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் வெங்கட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு உரிய நேரத்துக்கு சென்று வருவதில்லையாம். இதனால், மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள், தொழிலாளா்கள், விவசாயிகள் அவதியடைந்து வருவதாகவும் புகாா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை புகாா் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனா். ஆகவே, மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த வெங்கட்டி சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.