சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சத்துணவு திட்டத்தின் கீழ் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
முத்துப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றிய ச.முத்தையா என்பவா், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்த போது உயிரிழந்தாா். இந்நிலையில், அவரது மனைவி மு.சசிகலா, கருணை அடிப்படையில் தனக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தாா்.
இதையடுத்து, சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், இலுப்பக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கருணை அடிப்படையில் மு.சசிகலா என்பவருக்கு சமையலராக பணி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மு. சசிகலாவிடம், மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வழங்கினாா்.
அப்போது மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவுத் திட்டம்) சாந்தி உடனிருந்தாா்.