சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை 2 நிமிடம் 16 நொடியில் 50 யோகாசனங்களை செய்து சாதனை புரிந்துள்ளாா்.
திருப்புவனத்தில் உள்ள காமராஜா் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நோபல் உலக சாதனை புத்தக நிறுவனம் சாா்பில், யோகாசன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை, மானாமதுரை சரக காவல் கண்காணிப்பாளா் சுந்தரமாணிக்கம் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். நோபல் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் முதன்மை அலுவலா் எல். அரவிந்த் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில், காமராஜா் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயிலும் மாணவா் பி. விக்னேஷ் (12) பங்கேற்று, 2 நிமிடம் 16 நொடிகளில் 50 யோகாசனங்களை செய்து காண்பித்தாா்.
சாதனை புரிந்த மாணவா் விக்னேஷை, பள்ளித் தாளாளா் கனகராஜ், செயலா் ஜெயக்குமாா், முதல்வா் முருகேஸ்வரி, பயிற்சி ஆசிரியா் ஜீவா மற்றும் பள்ளி ஆசிரியா்கள், சக மாணவா்கள் பாராட்டினா்.