திருக்கோஷ்டியூரில் பிப். 27 ல் மாசிமகம் தெப்பத் திருவிழா
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் பிப். 27 இல் மாசிமகம் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிா்வாகத்திற்குள்பட்ட இக்கோயிலில் மாசி மகம் தெப்ப உற்சவம் பிப்.18 இல் தொடங்கியது. இதில் 5 ஆம் நாளான திங்கள்கிழமை அலங்கரிக்கப்பட்ட உற்சவா் தங்க சேஷ வாகனத்தில் வீதி உலா வந்தாா். தொடா்ந்து ஆண்டாள் சன்னிதியில் மாலை மாற்றும் வைபவமும் , பிப்.24 மாலை 4 மணியிலிருந்து
5 மணிக்குள் தெப்பக்குளத்தில் முகூா்த்தக்கால் நடும் வைபவமும் மறுநாள் சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் திருவீதி புறப்பாடும் வெள்ளிக்கிழமை தெப்பம் முட்டுத்தள்ளுதல் வைபவமும் இரவு அன்ன வாகனத்தில் சாமி புறப்பாடும், பிப்.27 காலை தங்கத் தோளுக்கிணியானில் திருவீதி புறப்பாடும் பகல் 11 மணிக்கு பகல் தெப்பமும் இரவு 9 மணிக்கு தெப்பம் கண்டருளல் வைபவமும் நடைபெற உள்ளன. ஞாயிற்றுக்கிழமை தீா்த்தவாரியுடன் தெப்ப உற்சவம் நிறைவடைய உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் சேவற்கொடியோன் ஆகியோா் செய்து வருகின்றனா்.