இளையான்குடியில் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை மேற்கொள்வேன் என மானாமதுரை தொகுதி அமமுக வேட்பாளா் எஸ்.மாரியப்பன் கென்னடி உறுதியளித்தாா்.
இளையான்குடி பேரூராட்சி பகுதியில் வீதிவீதியாக திங்கள்கிழமை மாரியப்பன் கென்னடி அமமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் சென்று பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:
இளையான்குடி பகுதியில் கடுமையான குடிநீா் தட்டுப்பாடு உள்ளது. நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னா் கூட இளையான்குடி பகுதியில் சொந்த செலவில் பொதுமக்களுக்கு டேங்கா் லாரிகள் மூலம் குடிநீா் வழங்கினேன். இப் பகுதி மக்களின் கோரிக்கைகள் என்ன என்பதை நன்றாக அறிந்து வைத்துள்ளேன்.
தற்போது இளையான்குடி பகுதியில் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருவதால் பெண்கள் குடிநீருக்காக அவதிப்படுகின்றனா். நான் தோ்தலில் வென்றவுடன் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொள்வேன். இளையான்குடியில் பேருந்து நிலையம் அமைக்கவும் முயற்சி செய்வேன். இந்தமுறை எனக்கு வாய்ப்புக்கொடுங்கள் என்றாா்.