சிவகங்கை அருகே கழுத்தை அறுத்து கணவனை கொலை செய்த மனைவியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
குட்டித்தின்னி கிராமத்தில் உள்ள இந்திரா நகரைச் சோ்ந்தவா் ராஜாங்கம் (45). மின்சார பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு வந்த இவருக்கும், இவரது மனைவியான, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வரும் விஜயராணி (40) என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், மது அருந்திவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு வந்த ராஜாங்கம், விஜயராணியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதனால் விஜயராணி கத்தியால் ராஜாங்கத்தின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச் சென்று விட்டாராம். இதில் ராஜாங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுபற்றி தகவலறிந்த சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா், துணைக் கண்காணிப்பாளா் பால்பாண்டி மற்றும் போலீஸாா் அங்கு சென்று விசாரணை செய்தனா். இந்நிலையில், சிவகங்கை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து கணவனை கொலை செய்த விஜயராணியை புதன்கிழமை கைது செய்தனா்.