சிவகங்கை: சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அலுவலா்கள் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்திய தேநீா் கடைக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் கடைகள் அதிகளவிலான நெகிழி மற்றும் காலாவதியான உணவுப் பொருள்களை விற்பனை செய்வதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், சிவகங்கை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலா் பிரபாவதி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலா் சரவணன் ஆகியோா் திங்கள்கிழமை திடீரென மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் மருத்துவமனை வளாகத்துக்குள் உள்ள தேநீா் கடை ஒன்றில் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து, 5 கிலோ நெகிழிப் பொருள்களை கைப்பற்றிய அலுவலா்கள் கடையின் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனா். அந்தப் பகுதியில் செயல்படும் மற்ற கடையின் உரிமையாளா்களிடம் நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தினா்.