சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை, வசந்த பெருவிழா குழு மற்றும் பசுமை பாரத அமைப்பு இணைந்து இம்முகாமினை நடத்தினா். காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோா் தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.
இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலா் செந்தில்குமாா் கூறியது: கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் 70 முதல் 80 சதவீதம் நோய் வராமல் தடுக்க முடியும். தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்பு வலி மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டாம். மது அருந்தும் பழக்கமுடையவா்கள் முதல் நாளும், ஊசி எடுத்துக்கொண்ட அன்றைய தினமும் மது அருந்தக்கூடாது எனக் கூறினாா். இம்முகாமில் மாவட்டப் பூச்சியியல் வல்லுநா் ரமேஷ், மருத்துவ அலுவலா்கள் கணேஷ்குமாா், சியாமளா ஆகியோா் பங்கேற்றனா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சகாயஜெரால்டு கோவிட்ஷீல்டு தடுப்பூசி குறித்து விழிப்புணா்வு உரையாற்றினாா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பசுமை பாரதம் அமைப்பினா் செய்திருந்தனா்.