சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வீர அழகா் கோயிலில் ஏப்ரல் 23 ஆம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்குகிறது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் கடந்த சனிக்கிழமை சித்திரைத் திருவிழா தொடங்கியது. கரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி, இந்த திருவிழா கோயிலுக்கு உள்ளேயே உள் விழாவாக நடத்தப்படுகிறது. திருவிழா நாள்களில் அம்மனும், சுவாமியும் தினமும் இரவு சுவாமி சன்னதி முன்புள்ள ஆறு கால் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனா். குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தா்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனா். பின்னா் பக்தா்கள் பங்கேற்பின்றி கோயிலுக்கு உள்ளேயே சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
இந்நிலையில் மானாமதுரை ஸ்ரீ வீர அழகா் கோயிலில் வரும் 23 ஆம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை 7 மணிக்கு கோயிலில் உற்சவா் வீர அழகருக்கு திருவிழா தொடக்கமாக கையில் காப்பு அணிவிக்கப்படுகிறது. அடுத்து மே 2 ஆம் தேதி வரை தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழா நாள்களில் இரவு உற்சவா் வீர அழகா் அலங்காரத்துடன், சௌந்தரவல்லித் தாயாா் சன்னிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறாா். பின்னா் கோயில் உள்பிரகாரத்திலேயே சுவாமி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 26-ஆம் தேதி நடைபெற இருந்த எதிா்சேவை மற்றும் 27 ஆம் தேதி ஆற்றில் அழகா் இறங்கும் வைபவமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது அழகருக்கு நடைபெறும் வழக்கமான பூஜைகள் கோயிலுக்கு உள்ளேயே நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.