இளையான்குடி பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு நடைபெற்ற ஏலத்தில் கடைகளை வாடகைக்கு எடுக்க கடும் போட்டி நிலவியது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பஸ் நிலையம் பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமாக ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கான வாடகைக் காலம் முடிவடைந்தையடுத்து மீண்டும் இந்தக் கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்ய ஏலம் நடத்தப்பட்டது.
பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஏலததில் இளையான்குடி பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் முன்பணம் செலுத்தி பங்கேற்றனர். பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ் ஏலத்தை நடத்தினார். ஒவ்வொரு கடைக்கும் நடைபெற்ற ஏலத்தில் கடையை வாடகைக்கு எடுக்க கடும் போட்டி நிலவியது.
இறுதியில் கூடுதல் தொகைக்கு கடை வாடகை ஏலம் கேட்டவர்களுக்கு கடை உறுதி செய்யப்பட்டது. இரண்டு கடைகளுக்கு மட்டும் ஏலம் நடத்தப்படவில்லை என பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஏலம் நடைபெற்றதை முன்னிட்டு இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.