மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சனிக்கிழமை இரவு அரசுப் பேருந்து நடத்துனரை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பி. மீனாட்சிபுரம் பூஞ்சுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் செல்லச்சாமி (45). இவர் அரசுப் போக்குவரத்துக்கழக நகரப் பேருந்தில் நடத்துனராகப் பணியாற்றி வருகிறார்.
செல்லச்சாமிக்கும் இதே கிராமத்தைச் சேர்ந்த பூங்குடிச்சாமி என்பவருக்கும் காலி வீட்டுமனை பிரச்னை தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.
இதையும் படிக்க | கருப்பணசாமி கோயிலில் 50 கிடாய்கள் பலியிட்டு வழிபாடு
இந்நிலையில் திருப்புவனம் அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் பணி முடித்துவட்டு இரவு உணவு வாங்குவதற்காக செல்லச்சாமி திருப்புவனம் வாரச்சந்தை பகுதிக்கு வந்தார்.
அப்போது அங்கு வந்த பூங்குடிச்சாமி, செல்லசாமியிடம் தகராறு செய்து அவரை உருட்டுக்கட்டையால் பின்பக்க தலையில் தாக்கினாராம்.
இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த செல்லச்சாமி மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
திருப்புவனம் காவல் துறையினர் இந்தக் கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து பூங்குடிச்சாமியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.