மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வு தளத்தில் கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணிகள் இன்னும் ஐந்து மாதங்களில் நிறைவடைந்து அருங்காட்சியகம் திறக்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி புதன்கிழமை தெரிவித்தார்.
கீழடி அகழாய்வு தளத்தில் தொல்லியல் துறை மூலம் ரூ 12 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கீழடி அகழாய்வு தளத்திற்கு வந்து அங்கு அருங்காட்சியகம் கட்டும் பணிகளை பார்வையிட்டு, கட்டுமான பணிகள் குறித்து அங்கிருந்த பொறியாளரிடம் அவர் விபரம் கேட்டறிந்தார்.
அப்போது பொறியாளர்கள் அருங்காட்சியகத்தின் 6 பிளாக்குகளுக்கும் தனித்தனியாக கட்டுமான பணியாளர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டு பணி விரைவாக நடைபெற்று வருவதாக ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
அதன் பின்னர் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கூறுகையில், கீழடி அருங்காட்சியகம் கட்டிட கட்டுமான பணிக்கு உறுதுணையாக வட்டாட்சியரும் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் கட்டுமானப்பணி முடிவுறும். அதனைத் தொடர்ந்து இரண்டு மாத காலத்திற்குள் அருங்காட்சியகத்திற்கான உள்கட்டமைப்பு பணிகள் முடிக்கப்படும்.
இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் அருங்காட்சியத்தின் கட்டிட பணி முழுமையாக நிறைவு பெற்று தொழில்நுட்ப வடிவம் கொண்ட உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் கீழடியில் திறந்து வைக்கப்படும் என்றார்.