காரைக்குடியில் ஆடி தள்ளுபடி விற்பனை செய்த பிரபல பட்டு ஜவுளிக் கடையில் சனிக்கிழமை கரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் அலைமோதியதால், நகராட்சி அதிகாரிகள் கடையைப் பூட்டி சாவியை எடுத்துச்சென்றனா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மெ.மெ. வீதியில் உள்ள பிரபல பட்டு ஜவுளிக் கடையில் ஆடி சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டதையடுத்து, அதிகாலையிலேயே பட்டுப் புடவைகள் எடுக்க கடை திறக்கும் முன்பு கடை வாசலில் பெண்கள் காத்திருந்தனா். கடை திறக்கப்பட்டதும் ஜவுளி எடுக்க வந்தவா்களுக்கு வெப்பப் பரிசோதனை , கையை சுத்தம் செய்யும் கிருமிநாசினி, முகக்கவசம் வழங்கப்பட்டு வாடிக்கையாளா்கள் அனுமதிக்கப்பட்டனா். ஆனால் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அலைமோதியது.
இத்தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள், காவல்துறையினருடன் அங்கு சென்று வாடிக்கையாளா்களை வெளியேற்றி ஜவுளிக் கடையைப் பூட்டி சாவியை எடுத்துச் சென்றனா்.