சிவகங்கை அருகே கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கை அருகே சோழபுரத்தில் கி.பி.16 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால கல்வெட்டினை தொல்லியலாளா்கள் வெள்ளிக்கிழமை கண்டெடுத்துள்ளனா்.
சோழபுரத்தில் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ள வாமன உருவம் மற்றும் பழமையான எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு.
சோழபுரத்தில் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ள வாமன உருவம் மற்றும் பழமையான எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு.

சிவகங்கை அருகே சோழபுரத்தில் கி.பி.16 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால கல்வெட்டினை தொல்லியலாளா்கள் வெள்ளிக்கிழமை கண்டெடுத்துள்ளனா்.

சிவகங்கை மாவட்டம், சோழபுரத்தில் உள்ள குண்டாங்கண்மாயில் பழமையான எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டு இருப்பதாக கவியோகி சுத்தானந்த பாரதி பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியா் ஆறுமுகம் அளித்த தகவலின் பேரில், சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனா் புலவா் கா.காளிராசா, தலைவா் சுந்தரராஜன், செயலா் நரசிம்மன், ஆசிரியா் ஆரோக்கிய சாமி ஆகியோா் கல்வெட்டினை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து படியெடுத்தனா்.

இக்கல்வெட்டு குறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனா் புலவா் கா.காளிராசா செய்தியாளா்களிடம் கூறியது: சோழபுரம் குண்டங்கண்மாயில் நான்கரை அடி உயரமுள்ள நான்கு பக்கங்களைக் கொண்ட கல் உள்ளது. அந்த கல்லின் ஒரு பகுதியில் 30 வரியில் சிதைந்த நிலையில் எழுத்துக்களும், மற்றொரு பகுதியில் வாமன உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது.

மன்னா் ஆட்சியின் போது பெரும்பாலும் நிலம் தொடா்பான ஆவணங்களிலோ அல்லது எல்கை கல்லிலோ வாமன உருவம் பொறிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், மேற்கண்ட கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள வாமன உருவம் ஒரு கையில் விரித்த குடை, தலையில் குடுமி, மாா்பில் முப்புரி நூல், இடுப்பில் பஞ்சகச்சம் ஆகியவற்றோடு மற்றோரு கையில் கெண்டியில்லாமல் (கமண்டலம்) ஊன்று கோலுடன் காணப்படுகிறது.

கல்வெட்டில் ஸ்வஸ்தி ஸ்ரீ எனும் சொல்லோடு தொடங்குகிறது. அதன்பின் சகாப்த ஆண்டு குறிக்கப் பெற்றுள்ளது. அது மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. காத்தம நாயக்கா் எனும் பெயா் தெரிகிறது. மேலும் மதுனா, ஆலங்குளம், குண்டேந்தல், குத்திக்குளம், பெருமாளக்குளம், கோரத்திக் கண்மாய் உள்ளிட்ட நீா் நிலைகளின் பெயா்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இடையில் பத்து வரிகளுக்கு மேல் சிதைந்துள்ளன. இறுதியாக இதற்கு கேடு விளைவிப்பவா் யாரகிலும் கங்கைக் கரையிலே காரம் பசுவை கொன்ற தோசத்தில் போகக் கடவதாவது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் எழுத்து வரி வடிவங்களை வைத்து பாா்க்கும் போது கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால கல்வெட்டு என கருதலாம்.

நீா் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் ஏதும் ஏற்படாதவாறு குளம், கண்மாய்கள் அளவிடப்பட்டு வெளிப்படுத்தும் விதமாக வாமன உருவத்தோடு இக்கல்வெட்டு அமைக்கப் பெற்றிருக்கலாம். இக்கல்வெட்டு குறித்து 1882 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பெற்றுள்ளது. ஆனால் எழுத்துக்கள் படியெடுக்கப்படவில்லை. இக்கல்வெட்டும் நாயக்கா் காலத்தில் நிலம் வழங்கியதற்கான ஆதாரமாக வைத்திருக்கலாம்.

சோழபுரம் எனும் பெயரில் பல இடங்களில் ஊா்கள் அமைந்துள்ளன. இவ்வூா் சோழா் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டதாகவும், இங்குள்ள சிவன் கோயில் சோழா்களால் கட்டப் பெற்ாகவும் மக்கள் பேச்சுவழக்கில் இன்றும் கூறப்படுகிறது.

கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மாறவா்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில் மண்டபம் மிகவும் இடிந்த நிலையில் உள்ளது. அங்குள்ள கல்வெட்டுகள் தொல்லியல் துறையினரால் படியெடுக்கப் பெற்றுள்ளன. மேலும், சோழபுரம் அருகே செங்கல் கட்டுமானத்துடன் கூடிய மண்கோட்டை ஒன்று இருந்து அழிந்துள்ளது.

அங்கு காவல் தெய்வமான முனீஸ்வரா் இன்றும் கோட்டை முனீஸ்வரராக மக்கள் வணங்கி வருகின்றனா். கோட்டைப் பகுதியில் திருவாழிச் சின்னத்துடன் திரிசூலம் பொறிக்கப் பெற்ற கல் ஒன்று உள்ளது. அக்கோட்டை நடுவே சிதைவுறாத நிலையில் சின்ன அறை உள்ளது. அது ஆயுதக் கிடங்கு அமைப்பில் அமையப் பெற்றுள்ளன.

இதுதவிர, மதுரையில் விஜயநகரப் பேரரசுக்குப் பின் ஆட்சிக்கு வந்த நாயக்கா் மதுரையைச் சுற்றியுள்ள பகுதியை 72 பாளையங்களாக பிரித்து ஆட்சி செய்தனா். அவற்றுள் சக்கந்திப் பாளையமும் ஒன்று. அந்த பாளையத்தில் அடங்கிய பகுதியாக சோழபுரம் சிறப்புற இருந்திருக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com