திருப்பத்தூா் அருகே பிராமணப்பட்டி கிராமத்தில் பொது மயானப்பாதையை மீட்டுத் தரக் கோரி அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இக்கிராமத்தில் பொதுமயானத்துக்குச் செல்லும் பாதை கடந்த 5 ஆண்டுகளாக தனிநபா் பட்டாவில் உள்ளது. இதனால் இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய எடுத்துச் செல்லும் போது பிரச்னை ஏற்படுகிறது. இது சம்பந்தமாக திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த மே 31 ஆம் தேதி சமாதானப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதன்படி புதன்கிழமை தேவகோட்டை கோட்டாட்சியா் சுரேந்திரன், வட்டாட்சியா் ஜெயந்தி உள்ளிட்ட அதிகாரிகள் மயானத்துக்கு செல்ல 2 மாற்றுப் பாதைகளை காட்டினா். அப்போது ஒரு பாதை பட்டா நிலம் மற்றும் கோயில் நிலம் வழியாகச் செல்வதாகவும், இரண்டாவது பாதையால் 500 ஏக்கா் பாசனத்துக்குச் செல்லும் வாய்க்கால் பாதிக்கப்படுவதாகவும் கூறி, ஏற்கெனவே உள்ள பாதையை மீட்டுத்தரும்படி கிராம மக்கள் வலியுறுத்தினா்.