திருப்புவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சரக்கு வேன் மோதியதில் பழுதடைந்து சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு வேனின் ஓட்டுநர் உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பூவந்தியை அடுத்த இலுப்பக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் குருநாதன்(50). இவர், தனது சரக்கு வேனில் வாழைக்காய் தார்களை ஏற்றிக்கொண்டு மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். திருப்புவனம் அருகே மணலூர் என்ற இடத்தில் சென்றபோது வேன் பழுதாகி சாலையோரத்தில் நின்றது.
இதையடுத்து குருநாதன் வேனை விட்டு இறங்கி சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது மானாமதுரையில் இருந்து மதுரைக்கு சரக்கு ஏற்றச் சென்ற மற்றொரு சரக்கு வேன் குருநாதன் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
திருப்புவனம் அரசு மருத்துவமனையில் குருநாதனின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்புவனம் போலீசார் இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விபத்தை ஏற்படுத்திய வேனின் ஓட்டுநர் மானாமதுரையைச் சேர்ந்த பஞ்சு மகன் திருப்பதி(45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.