மாநில கொள்கை வளர்ச்சிக் குழுவில் உலகம் முழுவதும் சென்று கம்பனுக்கு நாட்டியாஞ்சலியால் புகழ் பரவச்செய்த திருநங்கை நர்த்தகி நடராஜை உறுப்பினராக நியமனம் செய்தமைக்கு காரைக்குடி கம்பன் கழகம் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கிறது என்று கம்பன் கழக தலைவர் தெரிவித்தார்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி யில் கம்பன் கழக தலைவர் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது: காரைக்குடி கம்பன் கழக விழாவில் பரத நாட்டியம் மூலமாக முதன்முதலில் கம்பனுக்கு புகழாரம் செய்து பெருமை பெற்றவர் திருநங்கை நர்த்தகி நடராஜ். மேலும் கம்பனுக்கு உலகம் முழுவதும் சுற்றி நாட்டியாஞ்சலி மன மொழி மெய்களால் பெருமை செய்தவர்.
நர்த்தகி நடராஜ் வாழ்வில் பல தடைகளை தகர்த்து முன்னேறியதோடு முதன்முதலில் திருநங்கை என்ற பெயரை பயன்படுத்திய பெருமைக்குரியவர். தமிழக அரசின் கலைமாமணி விருதையும், இந்திய அரசின் பத்ம ஸ்ரீ விருதையும், தஞ்சை பல்கலையின் மதிப்புறு முனைவர் பட்டத்தையும் முதன்முதலில் பெற்ற திருநங்கை இவரே. மதுரையில் 1964 இல் பிறந்து பெற்றோர் ஆதரவை இழந்து தோழி சத்திபாஸ்கர் உதவியினாலும் ஊக்கத்தாலும் தஞ்சாவூர் நாட்டிய குரு கே பி கிட்டப்பா பிள்ளையின் ஆதரவால் அவரிடம் நடனம் பயின்று அவரிடமே தமிழ்ப்பல்கலையில் உதவியாளராகவும் பணியாற்றி இன்று உலகம் முழுவதும் சுற்றி வந்து நாட்டியக் கலையை பரப்பி, தன்னை முழுக்க முழுக்க அர்ப்பணித்து கொண்ட முதல் திருநங்கையும் ஆவார்.
மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித்திட்ட வடிவத்தில் கலை இலக்கியப் பங்களிப்பு தேவை கூடுதலாக மூன்றாம் பாலின பிரதிநிதியாகவும் இருக்கவேண்டும் என திருநங்கை நர்த்தகி நடராஜை நியமனம் செய்த தமிழக முதல்வருக்கு நன்றியையும், நர்த்தகி நடராஜூக்கு வாழ்த்துக் களையும் காரைக்குடி கம்பன் கழகம் தெரிவித்துக் கொள்கிறது என்றார்.