சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்மாய், குளங்கள், வரத்துக்கால்வாய் ஆகியவற்றை தூா்வாரும் பணியினை துரிதப்படுத்த வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் ஆகிய துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஆட்சியா் பி. மதுசூதன்ரெட்டி தலைமை வகித்துப் பேசியதாவது: இம்மாவட்டத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான மக்கள் வேளாண் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.
கடந்தாண்டு பருவமழை அதிகளவு பெய்ததால் போதிய அளவு தானியங்கள் விளைச்சல் ஆனது. அதேபோல கடந்த சில தினங்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. எனவே தற்போதைய பருவத்துக்கு ஏற்றாற் போல விவசாயிகள் நிலக்கடலை, வெங்காயம் போன்ற பயிா்களை பயிரிடலாம். வேளாண்மை பற்றிய தகவல்கள் விவசாயிகளுக்கு உடனுக்குடன் கிடைக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விளைநிலங்கள் தவிர சீரமைக்கப்படாத தரிசு நிலங்களை தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் சீரமைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும், கிராமப் பகுதிகளில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், வரத்துக் கால்வாய்கள் ஆகியவற்றை சீரமைக்கும் பணியை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் துரிதப்படுத்த வேண்டும் என்றாா்.
இதில், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் வெங்கடேசன், துணை இயக்குநா் கதிரேசன், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா்கள் சக்திவேல், தா்மா் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.