காரைக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் காவலா் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள ஆலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜி. ராஜா (34). இவா் காரைக்குடி அருகே சாக்கோட்டை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தாா். காவல் நிலையப் பணிக்காக ராஜா தனது ஊரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, ஆவுடைப்பொய்கை என்ற இடத்தில் திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றாா்.
அப்போது புதுக்கோட்டையிலிருந்து தேவகோட்டையை நோக்கிச்சென்ற காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இச்சம்பவத்தில் காரை அதிவேகமாக ஓட்டிவந்ததாக விக்னேஷ் என்பவரை போலீஸாா் கைது செய்தனா். உயிரிழந்த காவலா் ராஜாவுக்கு மனைவி, ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளனா். குன்றக்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.