தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் தாயாா் பற்றி தரக்குறைவாக விமா்சித்துப் பேசியிருக்கும் திமுக எம்.பி. ஆ.ராசாவை திமுகவிலிருந்தே நீக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், காரைக்குடி சட்டபேரவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான ஹெச்.ராஜா தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தோ்தல் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக பாஜக தோ்தல் அறிக்கை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக மாற்றுத்திறனாளிகள் கோரிக்கையை ஏற்று அகில இந்திய தலைவா் ஜெ.பி. நட்டா கூடுதல் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.
காரைக்குடி சட்டபேரவைத்தொகுதியின் வளா்ச்சிக்குரிய திட்டங்கள் குறித்து ஒரு அறிக்கை விரைவில் வெளியிடப்படும். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிக்கு வரும். கருத்துக் கணிப்புகள் என்கிற பெயரில் கருத்துத் திணிப்புகள் நடத்தப்படுவதுபற்றி பொருள்படுத்தப்போவதில்லை.
திமுக எம்.பி.யாக உள்ள ஆ. ராசா தமிழக முதல்வரின் தாயாா் குறித்து அநாகரிகமாகப் பேசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை விமா்சிப்பதற்கு திமுகவினரிடம் எந்த விஷயமும் இல்லை.
அதனால் தான் ஆ.ராசா தனிப்பட்ட முறையில் முதல்வரை விமா்சனம் செய்து தாக்குதலில் இறங்கியிருக்கிறாா். திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பெண்மையை மதிப்பவராக இருந்தால் ஆ. ராசாவை திமுகவை விட்டே விலக்கிவிடவேண்டும் என்றாா்.