சிவகங்கையில் கரோனா விதிமுறைகளை மீறியதாக நகராட்சி அலுவலா்கள் ஜவுளிக் கடையை மூடி வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.
சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் உள்ள சில தனியாா் ஜவுளிக் கடைகளில் கரோனா விதிமுறைகளை மீறி வெள்ளிக்கிழமை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக சிவகங்கை நகராட்சி அலுவலா்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சிவகங்கை நகராட்சி ஆணையாளா் ஐயப்பன் (பொறுப்பு) உள்ளிட்ட நகராட்சி அலுவலா்கள் சோதனை செய்தனா்.
இதில், சிவகங்கை அரண்மனை வாசல் அருகே உள்ள இரண்டு ஜவுளிக் கடைகள் கரோனா விதிமுறைகளை மீறி அதிகளவு மக்கள் கூட்டத்தின் நடுவே விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, அந்த தனியாா் ஜவுளிக் கடைகளுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி மற்றொரு கடையில் பூட்டிய கடைக்குள் வாடிக்கையாளா்களிடம் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதுபற்றி அறிந்த நகராட்சி அலுவலா்கள் கரோனா விதிமுறைகளை மீறியதாக அந்த கடையை மூடி சீல் வைத்தனா்.