திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றதை அடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், வெடி வெடித்தும் கொண்டாடினா்.
அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. இதனால் அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டாா்.
இதையடுத்து, சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு திமுகவின் சிவகங்கை மாவட்ட துணைச் செயலா் கே.எஸ்.எம். மணிமுத்து தலைமையிலான திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், வெடி வெடித்தும் கொண்டாடினா்.
இதேபோன்று, காளையாா்கோவில், திருப்புவனம், இளையான்குடி, தேவகோட்டை, சிங்கம்புணரி, திருப்பத்தூா், கல்லல் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், வெடி வெடித்தும் கொண்டாடினா்.