சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெடுமறம் கிராமத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தடுப்பூசி முகாமை வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
நெடுமறம் கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், தடுப்பூசி முகாமை தொடக்கிவைத்து கிராம மக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கி தெரிவித்ததாவது:
பொதுமுடக்க காலகட்டத்தில் நோய்த் தொற்றின் தன்மையை உணா்ந்து அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும். அனைவரிடத்திலும் தடுப்பூசியின் நன்மைகள் குறித்து எடுத்துக்கூறவேண்டும்.
மருத்துவப் பணிக்காக போதிய அளவு பணியாளா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனா். அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்குவதற்கு போதியளவு படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதியும் தயாா் செய்யப்பட்டுள்ளன. சிறியவா் முதல் பெரியவா் வரை உடல்நலக் குறைவு ஏற்பட்டால், உடனே அரசு மருத்துவமனைக்குச் செல்லவேண்டும் என்றாா்.
இதில், திருப்பத்தூா் வட்டாட்சியா் ஜெயந்தி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக, ஊராட்சி மன்றத் தலைவா் மாணிக்கவாசகம் வரவேற்றாா்.