சிவகங்கை மாவட்ட பாஜக மகளிரணி, இளைஞரணி சார்பில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத மாநில அரசைக் கண்டித்து காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு ஒரு லிட்டருக்கு பெட்ரோல் ரூ. 5, டீசல் ரூ. 10 என மக்களுக்கு தீபாவளி பரிசாக விலையை குறைத்தது. இதனால் பல மாநிலங்களில் கணிசமான அளவிற்கு பெட்ரோல், டீசலின் விலை குறைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியது போல் குறைக்காமல் மாநில வரவு-செலவு தாக்கலின் போது பல்வேறு காரணங்களை கூறி ரூ. 3 மட்டுமே குறைத்தது.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசை கூறி வந்த நிலையில் மத்திய அரசு குறைத்த பின்பும் மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காது ஏன்? எப்போது விலையைக் குறைக்கும் என்று கேள்விகள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் மேப்பல் சத்தியநாதன் தலைமைவகித்தார். மாவட்ட மகளிரணி தலைவர் எம். கோமதி நாச்சியார், மாவட்ட இளைஞரணி தலைவர் க. நாகேஸ்வரன் மற்றும் பாஜக மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், பாஜக மகளிரணி தொண்டர்கள், இளைஞரணி தொண்டர்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் பலர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.